செய்திகள்
அரும்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றார்.
பூந்தமல்லி:
சென்னை அரும்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 40). என்ஜினீயரான இவர், எழும்பூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பூர்ணிமா (34), கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். பூர்ணிமா வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புரசைவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்து வரும் நபர் ஒருவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த நபர் ஆணா? பெண்ணா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.