செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா

Published On 2021-04-08 23:54 GMT   |   Update On 2021-04-08 23:54 GMT
நெல்லை மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
நெல்லை:

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கொரோனா பாதித்த பகுதியில் 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

நெல்லை பேட்டை செந்தமிழ் நகர் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேருக்கு பேட்டை சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு குழந்தை தவிர 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அறிந்த நெல்லை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி சுகாதார பணியாளர்கள், மருத்துவ குழுவினர் நேற்று அங்கு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதி என பேனர் வைத்தனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா? தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர வீடு, வீடாக சென்று காய்ச்சல் தடுப்பு மருந்துகளும், கபசுர குடிநீரும் வழங்கினர்.

நெல்லையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெருமாள்புரத்தில் 5 தெருக்களுக்கும், பேட்டையில் 2 தெருக்களுக்கும், டவுனில் ஒரு தெருவுக்கும் என மொத்தம் 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News