செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை பாலாறு ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு - விவசாயிகள் கவலை

Published On 2021-09-26 08:43 GMT   |   Update On 2021-09-26 08:43 GMT
பாலாறு, நல்லாறு ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித்துறையினர் அகற்ற வேண்டும் என பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
உடுமலை:

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி திருமூர்த்திமலையில் இருந்து  மேற்கு நோக்கி 60 கி.மீ., தூரம் பாலாறு பயணிக்கிறது. அதன் துணை ஆறாக நல்லாறு மற்றும் ஓடை, சிற்றாறுகள் பாலாற்றில் இணைகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மத்தியில், பாலாறு ஓடுவதால்  விவசாயம் மற்றும் குடிநீருக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியும் பெற்று வந்தன. திருமூர்த்தி அணை கட்டப்பட்டது, பி.ஏ.பி., திட்டம், காண்டூர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களினால் பாலாறு, நல்லாற்றில் நீர் வரத்து குறைந்தாலும்  பருவ மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆறு குறுகியுள்ளது. மணல் திருட்டும் அதிக அளவு நடப்பதால் பாலாறு, நல்லாறு மற்றும் துணை ஓடைகள் அடையாளத்தை இழந்து வருகின்றன. இருபுறமும் உள்ள விவசாய நிலங்களின் கிணறு, போர்வெல்களின் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச்சென்று  வறட்சிப்பகுதியாக மாறி வருகிறது.

எனவே, அழிந்து வரும் பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளை மீட்க, விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி இயற்கை நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பாலாறு, நல்லாறு ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித்துறையினர் அகற்ற வேண்டும் என பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. 6 ஆண்டுக்கு முன் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு அகற்ற வேண்டிய தென்னை மரங்கள், கட்டடங்கள் அடையாளமிடப்பட்டன. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. 

ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து பல இடங்களில் ஆறு காணாமல் போயுள்ளது. வெள்ள பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு என பல சிக்கல்களும் ஏற்படுகிறது என்றனர்.  
Tags:    

Similar News