செய்திகள்
கோபி அருகே வாலிபர்களை கத்தியால் குத்திய பழக்கடை வியாபாரி
கோபி அருகே தள்ளுவண்டி மோதியதாக ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்திய பழக்கடை வியாபாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபி அருகே உள்ள பூசநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 31). இவரது நண்பர் கார்த்தி (29). இருவரும் கூலித் தொழிலாளிகள்.
தற்போது கோவில் திருவிழா நடந்து வருகிறது. கணேசன், கார்த்தி இருவரும் நேற்றிரவு கோவில் திருவிழாவிற்கு சென்றனர். கோபி மணிமேகலை வீதியைச் சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் (வயது 35) என்பவர் அண்ணாச்சி பழத்தை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
கணேசனும், கார்த்தியும் அந்த பகுதியாக சென்றபோது மேகநாதன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மேகநாதன் அன்னாச்சிபழம் அறுப்பதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் வலது பக்க தோள்பட்டையில் குத்தினார். இதை தடுக்க முயன்ற கார்த்திக்கும் வலதுபக்க மணிக்கட்டில் கத்திக்குத்து விழுந்தது.
இதை அடுத்து இருவரும் கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.