செய்திகள்
சிவசேனா

விவசாயிகள் போராட்டம் முடியக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

Published On 2021-01-07 02:07 GMT   |   Update On 2021-01-07 02:07 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் முடிந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மும்பை :

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே 7 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) 8-வது கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தநிலையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் நேற்றைய தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியில் உறையும் குளிரில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்ட 50 விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த சட்டங்களை திரும்ப பெறாமல் விவசாயிகளும் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற தயாராக இல்லை.

இதுவரை 8 சுற்று பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என்பதால், பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம். விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

டெல்லியில் உறையும் குளிர், கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கியிருக்கும் குடில்களில் மழைநீர் புகுந்து அவர்களின் உடைகள், படுக்கைகள் நனைத்துவிட்டன.

இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும். உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News