செய்திகள்
சென்னை மாநகராட்சி

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ‘டெலிமெடிசின்’ உதவி- சென்னை மாநகராட்சி ஏற்பாடு

Published On 2021-06-07 06:44 GMT   |   Update On 2021-06-07 06:44 GMT
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை 3 மாதங்கள் வரை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதுவரை நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும் காலம் முடிந்த பிறகும் உடல் ரீதியாக சில பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள்.

இவர்களுக்கு உதவுதற்காக டெலிமெடிசின் வசதியை சென்னை மாநகராட்சியில் கமி‌ஷனர் ககன் தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார்.

இது பற்றி சுகாதார அதிகாரி ஜான்வர்கீஸ் கூறியதாவது:-

15 மண்டலங்களிலும் குணமடைந்து திரும்பியவர்களில் பலருக்கு மீண்டும் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாதிரி கொரோனாவை நீண்ட நாள் கொரோனா என்று கூறப்பட்டுள்ளது.



எனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை 3 மாதங்கள் வரை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 100 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை தொடர்பு கொள்ள 9498015100/ 200/300/400 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

போனில் தொடர்பு கொண்டு எண்னென்ன அறிகுறி இருக்கிறது என்பதை தெரிவித்தால் போனிலேயே டாக்டர்களின் ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்யப்படும். மனரீதியாக ஆலோசனை பெற மனோதத்துவ நிபுணர்கள், உணவு முறைபற்றி சொல்லி தர டயட்டீசியன்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மனரீதியான ஆலோசனைகள் பெற 044-46122300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

டெலிமெடிசின் வசதியை பெற GCC VIDMED என்ற தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை பெற முடியும்.

வாட்ஸ் அப் மூலமும் தொடர்பு கொள்ளலாம். அதற்கான தொடர்பு எண்கள் 9498346510/11/12/13/14

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News