செய்திகள்
தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது- அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த கலெக்டர்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மீது அந்தந்த துறை நடவடிக்கையை தொடங்குவதுடன், மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. எனினும் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தடுப்பூசியின் அவசியம் குறித்து அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்வதற்காக உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத் மாவட்ட கலெக்டர் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி மாவட்ட தலைமை வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது என கலெக்டர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மீது அந்தந்த துறை நடவடிக்கையை தொடங்கும். அத்துடன், மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். எனவே சம்பளம் கிடைக்காது என்ற பயத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.