செய்திகள்
தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் அமராவதி அணை.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-04-21 04:43 GMT   |   Update On 2021-04-21 11:20 GMT
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் அமராவதி அணைக்கு கைகொடுத்ததால் அணையின் நீர் இருப்பு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக 85அடியில் நீடித்து வருகிறது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன.

அவற்றின் மூலமாக மழைக் காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் அமராவதி அணைக்கு கைகொடுத்ததால் அணையின் நீர் இருப்பு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக 85அடியில் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் தண்ணீர் திறந்துவிடுமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் 10 நாட்களுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 16 வாய்க்கால்கள் மூலமாக 26ஆயிரத்து 553 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பிரதான கால்வாய் மூலமாக 25ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் திட்டங்களுக்கும் நீர்வரத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News