செய்திகள்
அணு ஆயுதம் கொண்ட நாடு இறுதிவரை போரிட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: இம்ரான்கான்
அணு ஆயுத வல்லமை கொண்ட நாடு இறுதிவரை போரிட்டால் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஐ.நா. சபை 1.2 பில்லியன் மக்கள் நிறைந்த வியாபார சந்தையின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறதா? அல்லது நீதிக்கும், மனித நேயத்திற்கும் ஆதரவாக செயல்படப் போகிறதா? நாங்கள் நல்லது நடக்கும் என நம்பியுள்ளோம். ஒரு வேளை கெட்டது நடத்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம்.
பாகிஸ்தானை விட ஏழு மடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் நேரடி போர் ஏற்பட்டால் நீங்கள் சரணடைய வேண்டும் அல்லது சுதந்திரத்திற்காக சாகும் வரை போரிட வேண்டும். ஒருவேளை அணு ஆயுதம் எந்திய ஒரு நாடு சாகும் வரை போராட வேண்டுமென நினைத்தால் அது எல்லை கடந்து உலக அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா. சபை தான் காஷ்மீர் மக்கள் அவர்களது உரிமையை அவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என உத்தரவாதம் அளித்தது.
ஆனால் தற்போது காஷ்மீர் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது பேச்சுவார்த்தைக்கான நேரமில்லை. இது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம். அந்த நடவடிக்கையில் முதன்மையானது இந்திய அரசு காஷ்மீரில் அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்த வேண்டும்.
என கூறினார்.