செய்திகள்
ஓபிஎஸ்-ஈபிஎஸ் (கோப்புப்படம்)

அதிமுக கூட்டத்தில் ஆலோசித்தது என்ன?: ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை

Published On 2020-11-20 14:19 GMT   |   Update On 2020-11-20 14:19 GMT
அதிமுக கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்ததாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி உள்ளன.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே அ.தி.மு.க. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் புதிய மாவட்ட செயலாளர்களும், மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ‘‘பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் துவண்டு விடும் கட்சி அதிமுக அல்ல. இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்.

நீட் தேர்வில் திமுக-காங்கிரஸ் செய்த துரோகத்தை மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு   உள்ளிட்ட அதிமுக சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டம் முடிந்த பின்னர் ஓபிஎஸ்- ஈபிஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் ‘‘அதிமுக-வின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டசபை தேரதல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா வருகை, சசிகலா விடுதலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News