செய்திகள்
தனியார் பள்ளிகள் 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலித்து கொள்ளலாம்: கோர்ட் அனுமதி
நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி 28-ந்தேதிக்குள் வசூலித்து கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் தனியார் பள்ளிகள் வசூலித்து கொள்ள அனுமதி அளித்தார்.
மேலும், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.
முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27-க்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தார்.