ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை- கெஜ்ரிவால் அறிவிப்பு
புதுடெல்லி:
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியிலும் கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்-மந்திரி கெஜ்ரிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 2-வது முறையாக அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந் தேதி வரை டெல்லியில் ஊரடங்கு இருக்கிறது.
ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவதால், கெஜ்ரிவால் பல்வேறு சலுகைகளை இன்று அறிவித்துள்ளார். அதன்படி டெல்லியில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தேவையான பொருட்கள் 2 மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆட்டோ, வாடகை மற்றும் டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதைப்போல மேலும் பல சலுகைகளை வெளியிட்டுள்ளார்.