செய்திகள்
விபத்து

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2020-11-21 00:28 GMT   |   Update On 2020-11-21 00:28 GMT
நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
நித்திரவிளை:

நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை ஜோசப் காலனியை சேர்ந்தவர் மேரிஜாண், கார் டிரைவர். இவருக்கு சுனி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் டானியேல் எஸ்ரோன் (வயது 11), நித்திரவிளை பாலாமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் டானியேல் எஸ்ரோனும், அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அபி, சாவியோ, ஆலன் பிரிஸ்கோ ஆகியோர் தூத்தூர் கல்லூரி வளாகத்தில் விளையாடினர். பின்னர், அவர்கள் வீட்டுக்கு செல்வதற்காக பூந்தோப்பு காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வள்ளவிளை கோவில் வளாகம் பகுதியை சேர்ந்த பாஜியோ ரசிலின் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென டானியேல் எஸ்ரோன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டானியேல் எஸ்ரோன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் டானியேல் எஸ்ரோன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டானியேல் எஸ்ரோனின் தாயார் சுனி கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜாஸ்லின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News