ஆன்மிகம்
கருமாரிஅம்மன், முருகன்

திருத்தணி-திருவேற்காடு கோவில்களில் புத்தாண்டு வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள்

Published On 2020-12-18 06:53 GMT   |   Update On 2020-12-18 06:53 GMT
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருத்தணி, திருவேற்காடு கோவில்களில் பக்தர்கள் புத்தாண்டு வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருத்தணி, திருவேற்காடு கோவில்களில் பக்தர்கள் புத்தாண்டு வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி காலை 6.00 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் ஜனவரி 1-ந்தேதி இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்படும்.

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் தடை மற்றும் மாநிலம் முழுவதும் நடைமுறை உள்ள 144 தடை உத்தரவு ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஆண்டு திருப்புகழ் திருப்படி திருவிழா, 31.12.2020 மற்றும் 01.01.2021 ஆகிய நாட்களில் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

நள்ளிரவு 12 நேர தரிசனம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 31.12.2020 மற்றும் 01.01.2021 மலைக்கோவிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், படிகளின் வழியே குழுவாக வரும் பஜனைகள் தடை செய்யப்பட்டுள்ளது. மாலை 5.00 மணி முதல் 8 மணி வரையிலும் 01.01.2021 காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் உற்சவ மூர்த்தியினை தரிசனம் செய்ய ஏதுவாக யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு வழி தரிசனம் ரூ.200ல், 200 நபர்கள் மற்றும் இலவச பொது தரிசன வழியில் 200 நபர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 4800 பக்தர்கள்  இணையதள வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேரடியாக வருகை தரும் பக்தர்களுக்கு அரசு நெறிமுறைகளுக்குட்பட்டு பொது வழி மற்றும் சிறப்பு வழி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 8.30 மணிக்கு படி பூஜை தொடக்கம் சிறிய அளவில் கோவில் திட்டப்படி பக்தர்களின்றி நடத்தப்படும்.

இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் மலைக்கோவிலில் தங்குவதற்கும், மலைக்கோவிலுக்கு செல்வதற்கும் மற்றும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி கிடையாது.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், 2021-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில வருட புத்தாண்டு அன்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகம் போன்றவை சிறப்பாக நடைபெறும். கொரோனா நோய் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும், அரசின் வழிகாட்டு நடைமுறைமுறைகளின்படி, டிசம்பர் 31-ந்தேதி அன்று இரவு 8 மணிக்கு நடை சாற்றப்பட்டு, ஜனவரி 1-ந்தேதி 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர். அன்றிரவு மீண்டும் 8 மணிக்கு நடை சாற்றப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது.

பொதுமக்களுக்கு கோவில் உட்பிரகாரம் மற்றும் வெளிப் பகுதிகளில் பிரசாதம் மற்றும் அன்ன தானங்கள் வழங்க அனுமதிக் கூடாது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை.

சமுக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். உடல் நிலை சரியில்லாதவர்கள் காய்ச்சல் உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது.

அரசு வெளியிட்டுள்ள நோய் தொற்று பரவல் தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News