செய்திகள்
மரணம்

விருதுநகரில் திருமணமாகாமல் கர்ப்பமான இளம்பெண் மரணம்

Published On 2021-08-25 11:26 GMT   |   Update On 2021-08-25 11:26 GMT
விருதுநகரில் திருமணமாகாமல் கர்ப்பமான இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் லிங்க் ரோட்டைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள். இவரது மகள் மாரீஸ்வரி (வயது 26). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாரீஸ்வரி வேலைக்கு செல்லவில்லை. அப்போது அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மாரீஸ்வரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

மேலும் மாரீஸ்வரிக்கு மஞ்சள் காமாலை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

திருமணமாகாமல் மகள் கர்ப்பமானதில் அதிர்ச்சியடைந்த தாய் அந்தோணியம்மாள் கேட்டபோது சூலக்கரை அருகே உள்ள தாதம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சூர்யா பால்ராஜ் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானதாக மாரீஸ்வரி கூறியதாக தெரிகிறது.

இதற்கிடையே உடல்நிலை மோசமான நிலையில் மாரீஸ்வரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கருவிலேயே சிசுவும் இறந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News