செய்திகள்
மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - திருப்பூர் மருத்துவக்கல்லூரி பணிகள் தீவிரம்
நீட் தேர்வு முடிவு வெளிவந்தவுடன் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் ஒப்புதல் பெற்று உடனே அட்மிஷன் துவங்கும்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் திடீரென வேகமெடுத்துள்ளது.
மருத்துவ கல்லூரி முகப்பு கட்டிடம், நுழைவு வாயில் பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:
அட்மின் கட்டிடம், கல்லூரி வகுப்பறை, விடுதி, குடியிருப்பு என நான்காக பிரித்து கட்டுமான பணி நடக்கிறது. வகுப்புக்கான பணி 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 1 மாதத்துக்குள் மாணவர் அமர்ந்து படிக்க தேவையான வசதி ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப பணியை வேகப்படுத்தியுள்ளோம் என்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி ‘டீன்’ முருகேசன் கூறுகையில்:
நீட் தேர்வு முடிவு வெளிவந்தவுடன் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் ஒப்புதல் பெற்று உடனே அட்மிஷன் துவங்கும். 100 மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கூடுதலாக 50 மாணவர் சேர்த்து 150 மருத்துவ மாணவர்களை உருவாக்க முடியும்.
அதற்கேற்ப ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக அரசின் மூலம் கேட்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் முதல்கட்டமாக வகுப்பு தொடங்க தேவையான பணி மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.