செய்திகள்
கோப்புபடம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-06-11 17:30 GMT   |   Update On 2021-06-11 17:30 GMT
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பிரதமருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அனுப்பினர்.
புதுக்கோட்டை:

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி இலவசமாக ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். தேவையான சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர்.

பொன்னமராவதியில், இந்திய தொழிற்சங்கம்-சி.ஐ.டி.யூ. சார்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமையில் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோரிடம் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து பிரதமருக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

கறம்பக்குடி ஒன்றிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, பிரதமர் மோடிக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பினர்.

Tags:    

Similar News