செய்திகள்
மழை

கோவை மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2020-11-03 10:48 GMT   |   Update On 2020-11-03 10:48 GMT
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று இரவு திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. இடி- மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.
கோவை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று இரவு திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. இடி- மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

கோவை மாநகர் மற்றும் காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இரவு நேரம் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

காரமடை பகுதியில் நேற்று இரவு பெய்யத் தொடங்கிய மழை இன்று காலையும் நீடித்தது. கோவை மாநகரில் காலையில் மழை சற்று ஓய்ந்திருந்தாலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட இருள் காரணமாக காலை 7 மணிக்கு பிறகும் வாகனங்கள் மின்விளக்கை ஒளிரவிட்டபடி சென்றதை காண முடிந்தது.

கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 74 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சின்கோனா பகுதியில் 47 மில்லி மீட்டர் மழையும், பி.என். பாளையத்தில் 42.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரவு விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் பகுதியில் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News