செய்திகள்
க்ரைம்.

திருப்பூர் அருகே தொழிலாளியை கொன்ற கொள்ளையன் கைது

Published On 2021-10-15 08:27 GMT   |   Update On 2021-10-15 08:27 GMT
காயமடைந்த சுப்பிரமணியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42), கூலி தொழிலாளி. இவர் பொள்ளாச்சி ரோடு பிரிவில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மர குடோன் அருகே தினசரி இரவு தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று அவர் தூங்கும்போது அங்கு திருடர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் மரக்கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.1,500 ஐ திருடினர். 

அவர்களது சத்தம் கேட்டு சுப்பிரமணியும், மரக்கடையில் தங்கியிருந்த காவலாளி குமாரசாமியும் கொள்ளையன்களை பிடிக்க முயன்றனர். இதில் திருடர்கள் சுப்பிரமணியை சரமாரி தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். 

காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார்.

இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய திருடர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் திருப்புவனத்தை சேர்ந்த கொள்ளையன் அழகர்சாமி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News