நலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள்- குமாரசாமி
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர்மாவட்டம் தேவனஹள்ளி கிராமத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி பேசியதாவது:-
கர்நாடக மாநிலத்தை ஆள எனக்கு 5 ஆண்டுகள் முழுமையான அதிகாரம் கொடுங்கள், அப்படி கொடுத்தால் ஒரே ஆண்டில் 5,700 பப்ளிக் பள்ளிக்கூடங்கள் கட்டி கொடுக்கப்படும். அதேபோல் 2-ம் ஆண்டில் கிராம பஞ்சாயத்துக்களில் சுகாதார மையங்கள் ஆரம்பிக்கப்படும். பிரதமர் மோடி ஊழலை ஒழிக்கிறேன் என்று தெரிவித்து வருகிறார். ஆனால் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் அவருக்கு தெரியவில்லையா?
மன்கிபாத் என்று பேசி பிரதமர் நரேந்திரமோடி பெருமைப்பட்டு கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது அலுவலகத்திலிருந்து தடுப்பூசி வழங்குவது போல் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரே தடுப்பூசியை அனுப்பி வைத்தார் என்பது போல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மோடி நாட்டுக்கு எதையோ செய்ய உள்ளார் என்று கூறி வருகின்றனர். ஆனால் மீதமுள்ள ஆட்சி காலம் முடிந்த பின்னர் அது தெரியும். தற்போது அவர் குறித்து பேசுவது வேண்டாம். எனக்கு 5 ஆண்டுகள் முழு அதிகாரம் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும். அப்போது மாநிலத்தில் பஞ்சரத்ன திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்றார். * * * குமாரசாமி