மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ளது சிக்கராசம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 12-வது வார்டில் 800 குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
சிக்க ராசம்பாளையம் ஊராட்சி மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு பணம் கட்டி இந்த பகுதிக்கு தண்ணீர் வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திடீரென மேட்டுப்பாளையம் நகராட்சி இந்த பகுதிக்கு வழங்கி வந்த தண்ணீரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தி விட்டது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் சிக்கராசம்பாளையம் ஊராட்சியில் அப்பகுதி மக்கள் பலமுறை முறையீட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று காலை 10 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் காரமடை- மேட்டுப்பாளையம் சாலையில் சேரன் நகர் என்ற பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு 20 நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. முறையாக வந்து கொண்டிருந்த தண்ணீரையும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தி விட்டனர்.இது குறித்து புகார் கொடுத்தால், தண்ணீர் விடுவதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
எம்.எல்.ஏ., மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் இங்கு வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தொடர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.