செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் நேற்று முதன்முறையாக நான்காயிரத்தை தாண்டியது.
இன்றும் 4 ஆயிரத்தை தாண்டியது. 4,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி 1,02,721 ஆக உள்ளது.
நேற்று 4,343 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 7-ந்தேதி முதல் ஜூன் 17-ந்தேதி வரை 103 நாட்களில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த 16 நாட்களில் அது இரட்டிப்பாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மட்டுமே இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய மாநிலமாக இருந்தது. தற்போது தமிழ்நாடு, டெல்லி ஆகியவையும் ஒரு லட்சத்தை தாண்டிய மாநிலங்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
இன்று 2,082 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 64 பேர் உயிரிழந்துள்ளனர்.