செய்திகள்
அதிமுக

டிசம்பர் மாதத்துக்குள் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்- ஐகோர்ட்டில், தேர்தல் ஆணையம் தகவல்

Published On 2021-07-16 01:47 GMT   |   Update On 2021-07-16 01:47 GMT
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
சென்னை:

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க.வில் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடத்தாமல், நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், "இந்த வழக்கில் ஏன்? அ.தி.மு.க.வை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த வக்கீல், "அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கில் அ.தி.மு.க.வையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News