திண்டுக்கல் குடைப் பாறைப்பட்டியில் கழிவுநீர் செல்வதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர், முகமதியார்புரம், யூசூப்பியா நகர், பிஸ்மிநகர், ஏ.பி.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கருப்பணசாமி கோவில் வழியே சென்று வருகிறது. எனவே கழிவு நீர்செல்வதை தடுக்க வேண்டும் என குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்காததால் இன்று வத்தலக்குண்டு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து பல இடங்களில் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நகர் தெற்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.