அழகுக் குறிப்புகள்
பனிக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

பனிக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

Published On 2021-12-27 03:38 GMT   |   Update On 2021-12-27 08:57 GMT
பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இதன் மூலம் சரும வறட்சி, வெடிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம்.
பனிக்காலத்தில் சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. சருமத்தின் பளபளப்பு மற்றும் ஈரத்தன்மையைப் பாதுகாக்கும் எண்ணெய்யை சுரக்கும் சுரப்பிகள், பனிக்காலத்தில் குறைவாக சுரக்கின்றன. அதுமட்டுமில்லாமல் சருமத்தின் மேற்புறம் உள்ள துளைகள் அடைத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக சரும வறட்சி ஏற்படுகிறது.

காற்றில் உள்ள ஈரப்பதம், குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மென்மை குறைந்து சருமம் எளிதாக உலர்ந்து விடும். எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட சருமமும் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். எனவே உணவு, உடற்பயிற்சி, முறையான பராமரிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நடுத்தர வயதைக் கடந்த பெண்கள், தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்கான சிகிச்சை மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கும் சருமம் எளிதாக உலர்ந்து விடும். இவர்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.இந்த எண்ணெய்களைக் கொண்டு மசாஜும் செய்து கொள்ளலாம். குளித்த பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவிக்கொள்வது நல்லது.

பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இதன் மூலம் சரும வறட்சி, வெடிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். சோப்புக்குப் பதிலாக கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம்.

குளிர்ச்சி நிறைந்த தட்பவெப்ப நிலையில், உடல் வெப்ப நிலையை சீராகப் பராமரிப்பது முக்கியம். சத்துள்ள சூடான உணவைச் சாப்பிட வேண்டும். அடிக்கடி சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி ஆகிய உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்ப நிலையை சீராகப் பாதுகாக்கலாம்.

தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வது பெண்களுக்கு நல்லது. அதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாகி, உடலின் வெப்பநிலை சீராகும். சுரப்பிகள் சிறப்பாக செயல்படும். சருமத்தின் ஈரத்தன்மையும், பளபளப்பும் பாதுகாக்கப்படும்.

பனிக்காலத்தில் உள்ளாடைகளை அறைகளுக்குள் உலர வைப்பது தவறு. அதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சருமப் பிரச்சினை உண்டாகும். உடலிலும், ஆடைகளிலும் ஈரப்பதம் இருக்கக்கூடாது. சரும பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உடைகளை தனிப்பட்ட முறையில் துவைப்பதும், சோப்பு மற்றும் இதர துணிகளை தனியாக வைத்துக்கொள்வதும் நல்லது.

உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், குளிர்காலத்தில் அவை எளிதாக உலர்ந்து விடுகின்றன. அவற்றில் வெடிப்பு ஏற்படாதவாறு ‘லிப் பாம்’ தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் தரமானவற்றையே பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் உதடுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
Tags:    

Similar News