செய்திகள்
கொரோனா பரிசோதனை

திருக்குறுங்குடி கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-06-15 12:54 GMT   |   Update On 2021-06-15 12:54 GMT
திருக்குறுங்குடி கோவில் யானைகளான குறுங்குடி வள்ளி, சுந்தரவள்ளிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

களக்காடு:

களக்காடு அருகே திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோவில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் குறுங்குடி வள்ளி (32), சுந்தர வள்ளி (17) என்ற 2 யானைகள் உள்ளது.

கோவில் திருவிழாக்களின் போது 2 யானைகளும் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகளுக்கு முன் ஊர்வலமாக செல்லும். கோவில் வளாகத்தில் 2 யானைகளுக்கும் தனித்தனியாக இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு, பாகன்கள் மூலம் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த ஒரு சிங்கம் உயிரிழந்தது.

இதனைத்தொடர்ந்து கோவில்களில் வளர்க்கப்பட்டு வரும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருக்குறுங்குடி கோவில் யானைகளான குறுங்குடி வள்ளி, சுந்தரவள்ளிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. யானைகளின் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 யானைகளுக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்த பரிசோதனை முடிவுகளை ஜீயர் மட நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறைக்கும், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனருக்கும் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News