ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டத்தையொட்டி தேர்கள் அலங்காரம் செய்யும் பணி நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2019-07-13 03:38 GMT   |   Update On 2019-07-13 03:38 GMT
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. நெல்லையப்பர் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்டது.

இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

7-ம் திருவிழாவான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8.30 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கிலும், அம்பாள் முத்து பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் வீதி உலா வருதல் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி நடராஜர் திருக்கோலத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வந்தார். நேற்று இரவு 8 மணிக்கு பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு வீரமணி ராஜூ பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

8-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாளை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.

முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வதாக சுவாமி தேர், அதன்பின்பு அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் வரும். ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1800 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுன்றனர். இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News