உள்ளூர் செய்திகள்
மரணம்

மகள் இறந்த துக்கம்- ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர் கிணற்றில் விழுந்து மரணம்

Published On 2022-01-19 11:39 GMT   |   Update On 2022-01-19 11:39 GMT
மகள் விழுந்து இறந்த கிணற்றிலேயே தாயும் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் விவசாயி, இவரது மனைவி ஆதிலட்சுமி (34) ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருந்தார். இவர்களது மூத்த மகள் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது கிணற்றில் விழுந்து இறந்து விட்டார்.

இதனால் ஆதிலட்சுமி சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தங்களது நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே இவரது மகள் கவியரசி தாயை தேடி நிலத்திற்குச் சென்றார். அப்போது கிணற்றின் அருகே காலணியும், துண்டும் இருந்ததால் சந்தேகமடைந்து கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த ஆதிலட்சுமி உடலை மீட்டனர். தியாகதுருகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து குணசேகர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகள் விழுந்து இறந்த கிணற்றிலேயே தாயும் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News