புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா மிரட்டல்
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்த கதர் வாரிய அதிகாரி கணேசன் (வயது 54). கடந்த 7-ந் தேதி வாழைக்குளம் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட கணேசன் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமி நாராயணனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
கணேசன் கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொலையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும், அரசியல் காரணத்துக்காக கொலை நடந்துள்ளதாகவும், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும் கணேசன் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.
அதீதி ஓட்டல் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் எம்.எல்.ஏ.வாக இருந்து எந்த பயனும் இல்லை. இன்னும் ஒரு மாதத்துக்குள் கணேசன் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை.
எனவே, ஒரு மாதம் பார்ப்போம். வழக்கு சி.பி. ஐ.க்கு மாற்றாவிட்டால் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று கட்சி மற்றும் எம்.எல்.ஏ. பதவி வேண்டாம் என ராஜினாமா கடிதம் கொடுத்து விடுவேன்.
இவ்வாறு லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. பேசினார்.