திண்டிவனம் அருகே கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற காதலன் கைது
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கன்னியம்மாள்(வயது55). புற்றுநோயால் முருகன் பாதிக்கபட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து விழுக்கம் பகுதியில் கன்னியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று கன்னியம்மாள் அவரது வீட்டில் மர்ம மனிதரால் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். கன்னியம்மாளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதரை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டது. கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யபட்ட கன்னியம்மாள் வீட்டுக்கு மேல்மருவத்தூர் அருகே உள்ள இன்னலூரை சேர்ந்த சரவணன் (49) என்பவர் அடிக்கடி வந்து செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சரவணனை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவருக்கும் கன்னியம்மாளுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததும் தற்போது கன்னியம்மாளை நகைக்காக சரவணன் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் சரவணனை கைது செய்தனர்.
போலீசாரிடம் சரவணன் அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு :-
சம்பவத்தன்று நானும், கன்னியம்மாளும் சேர்ந்து அவரது வீட்டில் மதுக்குடித்தோம். இதில் போதை தலைக்கேறிய கன்னியம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் தூங்கி கொண்டிருந்த கன்னியம்மாளின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கத்தியால் கன்னியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் அவர் தாலி கயிற்றில் கோத்திருந்த நகை மற்றும் அவரது செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் தற்போது போலீஸ் விசாரணையில் சிக்கி கொண்டேன்.
கைதான சரவணனுக்கு விமலா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.