செய்திகள்
குண்டடம் பகுதியில் யூரியா தட்டுப்பாடு - விவசாயிகள் பாதிப்பு
மழை பொழிவால் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள் மக்காச்சோளத்தை விதைக்கத் தொடங்கினர்.
குண்டடம்:
தாராபுரம் வட்டம் குண்டடம், மானூர்பாளையம், மேட்டுக்கடை, உப்பாறு அணை, எரகாம்பட்டி, முத்தையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுவது வழக்கம்.
இதன்படி நிகழாண்டும் பி.ஏ.பி., தண்ணீர், மழை பொழிவு ஆகியவற்றினால் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள் மக்காச்சோளத்தை விதைக்கத் தொடங்கியுள்ளனர். பல பகுதிகளில் தொடர்ந்து விதைப்பு செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பாக விதைத்த மக்காச்சோளம் தற்போது முளைத்து களையெடுக்கும் நிலையில் உள்ளது.
களையெடுத்தவுடன் முதல் உரமாக யூரியா இடுவது வழக்கம். இந்தநிலையில் தற்போது குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் யூரியா இருப்பு இல்லாததால் மக்காச்சோளத்தை பயிரிட்ட விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே உரக்கடைகளில் பருவத்துக்கு தகுந்தவாறு தேவையான உரங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.