செய்திகள்
வடகிழக்கு பருவமழையையொட்டி உயிர்காக்கும் மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும் - கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
பொதுப்பணித்துறையின் கீழ் வரும் அணைகள், கால்வாய், குளங்களின் நீர் இருப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை-2021 முன்னேற்பாடு பணிகள் மற்றும் அனைத்து துறைகளின் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
கண்காணிப்பு அலுவலர் கோபால் பங்கேற்று பேசியதாவது:
வெள்ள பாதிப்பில் சிக்கும் கால்நடைகள், பொதுமக்களை மீட்பதற்கு மீட்புக்குழு தயாராக இருக்க வேண்டும். சூறாவளியால் கீழே விழும் மரக்கிளைகள், மரங்களை அகற்ற தேவையான உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும்.
பொதுப்பணித்துறையின் கீழ் வரும் அணைகள், கால்வாய், குளங்களின் நீர் இருப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கரையோர பகுதி பொதுமக்கள் கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவேண்டும்.
பொது சுகாதாரத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீர் தேங்கி நோய்கள் பரவுவதை தடுக்க பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு, கிருமி நாசினிகளை போதிய அளவில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.