செய்திகள்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சப்-இன்ஸ்பெக்டர் மனு

Published On 2021-02-23 04:58 GMT   |   Update On 2021-02-23 04:58 GMT
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் இறந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வழக்கில் தொடர்புடைய போலீசார் 10 பேரும் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா காரணமாக இறந்துவிட்டார். மீதம் உள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தும், அவற்றை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீதிபதி தாண்டவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சிறையில் உள்ள 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கை வருகிற 1-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதற்கிடையே இந்த வழக்கில் கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவும் மார்ச் 1-ந்தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News