செய்திகள்
மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்

மாநிலத்தின் மீது எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது- மத்திய மந்திரி தமிழில் டுவிட்டர் பதிவு

Published On 2020-08-03 03:04 GMT   |   Update On 2020-08-03 03:04 GMT
மத்திய அரசு ‘எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது’ என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழில் கருத்துகளை பதிவு செய்து இருந்தார்.
சென்னை:

கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோதே, தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தநிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தநிலையில் மீண்டும் அதில் உள்ள கருத்துகளுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்ப்புக்குரல் வலுத்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசிய உரையின் தமிழாக்க வீடியோவை பதிவிட்டு இருந்தார். மேலும் அதில் தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழில் கருத்துகளை பதிவு செய்து இருந்தார். அதில் அவர், ‘பொன்.ராதாகிருஷ்ணன்ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.



Tags:    

Similar News