கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எழுவன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 31).
இவருக்கும், தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூரைச் சேர்ந்த காளீஸ்வரன் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் லட்சுமி கணவர் மற்றும் குழந்தைகளுடன் கரிவலம் வந்தநல்லூரில் வசித்து வந்தார். காளீஸ்வரன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் லட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினரும் லட்சுமியை கண்டித்தனர். இதனால் காளீஸ்வரன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை காலி செய்து விட்டு லட்சுமியின் சொந்த ஊரான எழுவன்பச்சேரி கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து விட்டார்.
இங்கு சில நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த லட்சுமி நேற்று இரவு செல்போன் மூலம் கள்ளக்காதலனிடம் பேசி உள்ளார். இது தெரியவந்ததும் காளீஸ்வரன் மனைவியிடம் தகராறு செய்தார்.
இருவருக்கும் இரவு 11 மணி வரை வாக்குவாதம் நீடித்தது. இதில் காளீஸ்வரன் ஆத்திரம் அடைந்து லட்சுமியை சரமாரியாக தாக்கினார். இருப்பினும் அவருக்கு கோபம் தீரவில்லை.
வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவியை கத்தியால் குத்திய காளீஸ்வரன் பின்னர் அதிர்ச்சி அடைந்தார். பயந்துபோய் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதற்கிடையில் ஆபத்தான நிலையில் கிடந்த லட்சுமி கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் லட்சுமியின் உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடம் சென்று பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவரது அண்ணன் முத்துச்சாமி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் முருகேசுவரி மற்றும் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர்.