செய்திகள்
மேற்குவங்களம்: மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா,ஒரு மாதத்தில் மம்தா பானர்ஜி அரசிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அமைச்சர் இவர் ஆவார்.
கொல்கத்தா:
மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜீப் பானர்ஜி தனது முடிவுக்கு எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை.
"2021 ஜனவரி 22 ஆம் தேதி" இன்று வனத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை மந்திரி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வருத்தப்படுகிறேன் என ராஜீப் பானர்ஜி முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார். கவர்னர் ஜகதீப் தங்கர் அவரது ராஜினாமாவை ஏற்று கொண்டார். ஒரு மாதத்தில் மம்தா பானர்ஜி அரசிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அமைச்சர் இவர்.
திரிணாமுல் காங்கிரசின் சில தலைவர்கள் அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாக புகார் கூறி வந்தார். ஆனால் கட்சியில் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் புகார் அளித்த சில நாட்களுக்குப் பிறகு ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அவர் அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் எதிராக பல மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தார். திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி அவருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது.