உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

கிருஷ்ணசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2022-04-17 07:27 GMT   |   Update On 2022-04-17 07:27 GMT
சித்திரை திருவிழாவையொட்டி கிருஷ்ணசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
நாகர்கோவில்:
 
கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை  திருவிழா கடந்த 7-ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது. தினமும் இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் உள்ளிட்டவை நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9 ம் நாள் திருவிழாவான கடந்த 15-ந் தேதி நடைபெற்றது. நேற்று (16-ந் தேதி) 10 ம் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை சுவாமி ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. ஒழுகினசேரி பழையாற்றில் உள்ள ஆறாட்டு துறைக்கு சுவாமியை கொண்டு சென்று பூஜைகள் நடத்தினர். 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆறாட்டு துறையில் இருந்து செண்டை மேளம், குதிரை மற்றும் விஸ்வகர்மா ரத ஊர்வலத்துடன் சுவாமி கோவிலை வந்தடைந்தது. பின்னர் தீபாராதனை நடத்தப்பட்டு கொடி இறக்கம் நடந்தது. அதன் பின்னர் சுவாமி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த ரதத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த நிகழ்வை காண நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். 

அதிகாலை 2.30 மணிக்கு தெப்ப உற்சவம் நிறைவடைந்தது. அதன் பின்னர் சுவாமி ரத வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து 10 நாட்கள் நடந்த சித்திரை திருவிழா நிறைவடைந்தது.
Tags:    

Similar News