செய்திகள்
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
வருகிற செப்டம்பர் 28-ந் தேதி வரை 135 நாட்கள் உரிய இடைவெளியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
தற்போது தென் மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவ துடன், பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட காட்டாறுகள் வாயிலாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் அணை நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போதைய நிலவரப்படி 69.39 அடி நீர் மட்டம் உள்ளது.
மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில் 2,351.19 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,941 கன அடியாகவும், நீர் திறப்பு 66 கன அடியாகவும் உள்ளது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள குமரலிங்கம், கண்ணாடி புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 6 ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள 4,686 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மே மாதம் 16-ந்தேதி முதல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
வருகிற செப்டம்பர் 28-ந் தேதி வரை 135 நாட்கள் உரிய இடைவெளியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் தாராபுரம், கரூர் மாவட்ட பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு குடிநீர் மற்றும் நிலைப்பயிர்களுக்கு நீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடி பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சாகுபடி பணிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.