செய்திகள்
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Published On 2019-11-14 09:45 GMT   |   Update On 2019-11-14 09:45 GMT
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9-ந்தேதி இரவு தனது விடுதி அறையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு, பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் பெயரை பதிந்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை மாணவி குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது. அந்த பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாக அந்தப் பதிவில் கூறியிருந்தார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். 



இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று, ஐஐடிக்கு நேரில் சென்று மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், கூடுதல் ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News