செய்திகள்
செயின் பறிப்பு

காட்பாடி அருகே கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2019-11-05 15:09 GMT   |   Update On 2019-11-05 15:09 GMT
காட்பாடி அருகே கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் பைக்கிள் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி:

காட்பாடி அருகே கொண்டசமுத்திரம் காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் முத்தையா (வயது51). இவரது மனைவி கேத்தீஸ்வரி. நேற்று கணவன், மனைவி இருவரும் கே.வி.குப்பம் அருகே உள்ள தேவரிஷி குப்பத்திற்கு சென்று விட்டு பைக்கில் வந்தனர்.

கொசவன்புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் முகத்தில் துணி கட்டியபடி வந்த 2 மர்ம நபர்கள் கேத்தீஸ்வரியின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்தனர். இதில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கேத்தீஸ்வரியும், முத்தையாவும் கீழே விழுந்தனர். செயினை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக பைக்கில் தப்பி சென்று விட்டனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News