ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ேநற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நான்கு மாடவீதியில் கோவில் மணி ஒலிக்கப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அதிகாலை 3.45 மணிக்கு திருமஞ்சன சேவை, 4 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை நடந்தது. தேவாரம் பாடல் இசைக்கப்பட்டது.
காலை 4.30 மணியில் இருந்து கால அபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது. 6 மணிக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு மட்டும் நடந்தது. 7 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 7.30 மணிக்கு துணை சன்னதிகளில் நைவேத்தியம், காலை 10 மணிக்கு வெந்நீரால் மூலவர்களுக்கு அபிஷேகம், மதியம் 2 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு ஹரிகட்லா உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது.
அதேபோல் நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலை 10 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர்களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அகண்ட தீபாராதனை நடந்தது. ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.