செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த மாதம் திறப்பு: எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி டெல்லி பயணம்

Published On 2021-01-12 08:06 GMT   |   Update On 2021-01-12 08:06 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.50.80 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு வருகின்றன.

துபாயைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இந்த கட்டுமான பணிக்கு உதவி வருகின்றனர்.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதிக்கு முன்பே இந்த நினைவிடத்தை திறக்க அரசு முடிவு செய்து வருகிறது.


பிரதமர் மோடியை வரவழைத்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி சென்று பிரதமரிடம் அழைப்பிதழை வழங்க உள்ளார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.

இதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பிரதமரை சந்தித்து அழைப்பிதழ் வழங்க உள்ளனர்.
Tags:    

Similar News