செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக பலூச் தேசியவாத அமைப்பினர் அமெரிக்காவில் போராட்டம்

Published On 2016-09-24 10:52 GMT   |   Update On 2016-09-24 10:52 GMT
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு, பலூச் தேசியவாத அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹூஸ்டன்:

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு விடுதலை கோரி பலூச் தேசியவாத அமைப்பு போராடி வருகிறது. இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக பேசியதையடுத்து இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு பலூச் தேசியவாத அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய-அமெரிக்க சமுதாய உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதுதொடர்பான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கடத்தல் மற்றும் கொலை, பெண்கள் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கண்டித்தும் முழக்கமிட்டனர். சமீபத்தில் இந்தியாவின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Similar News