செய்திகள்
கோப்பு படம்.

அந்தியூர் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Published On 2021-01-09 16:06 GMT   |   Update On 2021-01-09 16:06 GMT
அந்தியூர் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். மேலும் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் அந்தியூர் எண்ணமங்கலத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 1-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந்தேதி மூதாட்டி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 519 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 261 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News