விளையாட்டு
மகளின் படத்தை வெளியிட வேண்டாம்: விராட் கோலி வேண்டுகோள்
கேமரா எங்களை படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என விராட் கோலி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார்.
அப்போது கேமரா அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பியது. அவரது கையில் இருந்த குழந்தையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் இதுவரை தனது மகளின் புகைப்படத்தை கோலி வெளியிட்டது இல்லை.
வாமிகாவின் முகம் தெரியாதவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே இருவரும் வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர். தற்போது கோலியின் மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து உள்ளனர்.
இந்தநிலையில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களுடைய மகளின் புகைப்படம் நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டதை உணர்ந்துள்ளோம். கேமரா எங்களை படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறோம். இதுதொடர்பான எங்களுடைய நிலைப்பாடும், கோரிக்கையும் அப்படியேதான் உள்ளன. வாமிகாவை யாரும் படம் பிடிக்க வேண்டாம். அவருடைய படங்களை வெளியிட வேண்டாம் என முன்பு என்ன காரணங்களுக்காக கோரிக்கை விடுத்தேனோ அதையே மீண்டும் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு கோலி கூறி உள்ளார்.