செய்திகள்
கோப்புபடம்

மனைவி தோசை சுட்டு தராததால் முதியவர் தற்கொலை

Published On 2020-09-13 02:06 GMT   |   Update On 2020-09-13 02:06 GMT
குன்றத்தூரில் மனைவி தோசை சுட்டு தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 66). மது குடிக்கும் பழக்கம் உடையவர். தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். மேலும் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி வத்சலா வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் ரவிச்சந்திரன் தனது உடலில் தீ வைத்து கொண்டு அலறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது மனைவி மது குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்,

மேலும் சம்பவத்தன்று ரவிச்சந்திரன் சாப்பிடுவதற்கு தோசை சுட்டு தரும்படி கூறி உள்ளார் அதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News