தொழில்நுட்பம்
உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுக்கும் சீன நிறுவனம்
ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக சீனாவை சேர்ந்த நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளாக சியோமி நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. தற்போதைய தகவல்களின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் 2021 ஆண்டு மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் மூன்றாவது பெரும் நிறுவனமாக இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சியோமி நிறுவனம் உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுக்கும் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆசியா பசிபிக், மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் சியோமி கவனம் ஈர்த்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் 2021 ஆண்டிற்குள் சியோமி உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய சந்தைகளில் சியோமி நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. இதேபோன்று மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளிலும் சியோமி சாதனங்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.
2021 சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களுக்கான ஆண்டாக இருக்கும். சியோமி மட்டுமின்றி ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் ஆசியா பசிபிக் பகுதிக்கான முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறலாம் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் லிண்டா சு தெரிவித்தார்.