செய்திகள்
விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
விநாயகர் சிலை மட்டுமல்லாது பூ, கடலை - பொரி, அவல் பொரி, ஆப்பிள், வாழை, தேங்காய், உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.
திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வழிபாட்டுக்கான விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தியை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவரவர் வீடுகளில் சதுர்த்தி விழாவை கொண்டாடவும், வழிபட்ட சிலைகளை அருகே உள்ள கோவில்களில் வைக்கவும், நீர்நிலைகளில் கரைக்கவும் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.
திருப்பூரில் பெரும்பாலான வடமாநிலத்தினர் வசிப்பதால் அவர்களும் சதுர்த்தியை கொண்டாட ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்காக சாலையோர கடைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
களி மண்ணில் செய்யப்பட்ட சிலைகள், கண்ணை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை மட்டுமல்லாது பூ, கடலை -பொரி, அவல் பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், வாழை, சாத்துக்குடி, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் களை கட்டியுள்ளது.
மேலும் விநாயகர் சிலையை அலங்கரிக்கும் மலர் மாலைகள், பேன்ஸி குடைகளும் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். திருப்பூர் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் ரூ.50-ல் தொடங்கி ரூ.2,500 வரை மதிப்பில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பூர் தாராபுரம்ரோடு, காங்கயம் ரோடு பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.