செய்திகள்
அர்மீனியா போராட்டம்

அசர்பைஜானுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டதை கண்டித்து அர்மீனியாவில் மக்கள் போராட்டம்

Published On 2020-11-11 23:27 GMT   |   Update On 2020-11-11 23:30 GMT
நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.
யரிவன்:

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. 

இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 

1994-ம் ஆண்டு நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையாமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாணத்திற்கு என தனியாக பாதுகாப்பு படைப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தன்னாட்சி பகுதிக்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. 

அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.

தங்கள் வசம் இருந்த நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அசர்பைஜான் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. 

இந்த தாக்குதலுக்கு நகோர்னோ-கராபத் மாகாணத்தில் இருந்த படையினர் பதிலடி கொடுத்துவந்தனர். நகோர்னோ-கராபத் மாகாண படையினருக்கு அர்மீனியா ஆதரவு அளித்ததால் இந்த சண்டை அர்மீனியா-அசர்பைஜான் இடையே நேரடி போரை உருவாக்கியது.

கடந்த சில வாரங்களாக கடுமையாக நடந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள முக்கிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுஷா என்ற நகரை அசர்பைஜான் படைகள் கைப்பற்றியது. இதையடுத்து, போரில் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக அசர்பைஜான் அறிவித்தது.   

இதை தொடர்ந்து, அர்மீனியா-அசர்பைஜான் இடையே ரஷியா முன்னிலையில் நேற்றுமுன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ரஷிய அதிபர் புதின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அர்மீனிய பிரதமர் நிக்கோல் பஷின்யான் மற்றும் அசர்பைஜான் அதிபர் இப்ஹாம் அலியவ் தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. 

மேலும், தாங்கள் கைப்பற்றிய நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய பகுதிகளை அசர்பைஜான் தங்கள் வசமே வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 

இதன் மூலம் பல வாரங்களாக நடந்த போரில் அர்மீனியா தோல்வியடைந்து அசர்பைஜான் வெற்றிபெற்றதாகவே தெரியவந்துள்ளது. 

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ரஷியா படையினர் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நகோர்னோ-கராபத் மாகாணத்தில் இருநாட்டு எல்லைகளை பிரிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் தொடங்கிய இந்த போரில் இதுவரை 1,400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நகோர்னோ-கராபத் மாகாணப்பகுதிகளை அசர்பைஜானிடம் இழந்ததை கண்டித்து பிரதமர் நிக்கோல் பஷின்யானுக்கு எதிராக அர்மீனிய தலைநகரில் நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய இந்த போராட்டத்தில் பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நாட்டின் நிலத்தை பறிகொடுத்ததற்காக பிரதமர் நிக்கோல் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டக்காரர்களால் வைக்கப்பட்டது.

இந்த சம்பவங்களால் அர்மீனியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 
Tags:    

Similar News