செய்திகள்
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு: துணைமுதல்வர், முக ஸ்டாலின் இரங்கல்
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் செயல்பட்டு வந்தார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவருக்கு கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். .அவரது மறைவுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓ. பன்னீர் செல்வம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் ‘‘பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!’’ எனத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘‘அமமுக பொருளாளர் வெற்றிவேல் #Covid19 பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்!
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.